ஏழாவது மலை முழுக்க இறை வடிவம். மலையே ஈசுவரனாக காட்சி அளிக்கிறார்.
உச்சியில் இருக்கும் கோயில், வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய திருத்தலம். அங்கே செல்லும்போது எல்லாப் பற்றும் விட்டு விடுகிறது. எல்லாம் அவன் இயக்கத்தில் நடக்கிறது என்று உறைக்கிறது. இதை ஏழுதும் நானும், படிக்கும் நீங்களும் ஏற்கனவே இதை செய்ய வேண்டும் என்ற நியதி எழுதப் பட்டிருகிறது என்பது புரிகிறது. குதூகலமும் குறையும் இல்லாத ஒரு பெருநிலை...! உணர்ந்தால்தான் அது புரியும்...!
உங்களுக்கு இங்கே சிவலிங்கமும், ஆவுடையாரும் தெரிந்தால், வெள்ளியங்கிரியின் மகிமை புரியும்...! இது தானே அமைந்த அமைப்பா, அல்லது யாரோ உருவாகியதா? இது உருவாக்க கூடிய உருவமாக தெரியவில்லை...! நமக்கு மேலே இயங்கும் சக்தி இதை செய்தது போல தெரிகிறது...!
தரிசனம் முடிந்த பின் கீழே இறங்கி வந்தோம். இறங்குவதற்கு எனக்கு இன்னுமொரு உதவி கிடைத்தது. இறங்கும்போது நாலு ஈக்கள் என் முன்னே பறந்துகொண்டே இருந்தன. இந்த ஈக்கள் அல்லது சிறு பூச்சிகள் ஏன் அப்படி பறக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவை இதைபோன்றே குறைந்தது நாலு அல்லது ஐந்து முறை செய்து காட்டின. சில சமயம் என் முன்னால், சில சமயம் நான் பிடித்திருக்கும் குச்சி மீது என்று மாறி மாறி பறந்து விளையாடின.
நாலரைக்கு இறங்க ஆரம்பித்து ஐந்தரைக்கு ஆறாவது மலைக்கு இறங்கியாயிற்று. டெண்டுக்கு வந்தோம், எட்டு மணிக்கு இறங்கலாம் என்று நினைத்தோம். அவன் நினைப்பு வேறாக இருந்தது. ஆறு மணிக்கு கும்மிருட்டு. ஆறேகாலுக்கு நல்ல மழை. மலையுச்சியில் மழையில் இரவில் என்று அனுபவமே ஒரு வித்தியாசமாக இருந்தது. அவன் வீட்டுக்கு வந்து ராத்தங்கி போக வேண்டும் என்பது அவன் விருப்பம் போல இருந்தது.
அடுத்த நாள் காலை நாலு மணிக்கு நடையை கட்டினோம். அவன் இயக்கிய மாத்திரத்தில் மூன்றாம் மலையை ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தோம். இப்போது எல்லாம் மங்களந்தான். கடையில் கூழ் குடித்துக்கொண்டும், பழம் உண்டும் குறைவிலாது பசியாறினோம். என்னால் நாராயணனுக்கு இன்னும் ஒரு சோதனை. கிழே சென்றதும் எனக்கு ஒரு fanta வேண்டும் என்று கூறினேன். அவர் எனக்கு முன்பாக இறங்கி Fanta வாங்கிகொண்டு குறைந்தது 200 படி ஏறி வந்து விட்டார். ஆக எனக்கு கடமையை முடிக்கும் முன்பே பரிசு...!
கீழே இறங்கி வெள்ளிங்கிரீஸ்வரர் பிரதோஷ தரிசனம் செய்து, நல்ல ஆசிர்வாதங்குளடன், நல்ல சந்தோசத்துடன், நல்ல எண்ணங்களுடன் பேருந்து ஏறி இல்லம் வந்தடைந்தோம்...! சிவாய் நம...!